மதுரை: புதுதில்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்டது. அதனடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோப்பநாய் பிரிவு, துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு, தமிழக போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல பயணிகளும் , அவர்களது உடமைகளும் பலத்த சோதனைக்கு பின்பே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பாதுகாப்பு காரணம் கருதி வருகின்ற பிப்ரவரி ஆறாம் தேதி வரை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.