தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 313 முதுநிலை வேதியியல் ஆசிரியா்களுக்கான பணி நியமன உத்தரவுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2018- 2019-ஆம் கல்வியாண்டில் காலியாக இருந்த 2,144 முதுநிலை ஆசிரியா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வினை ஆசிரியா் தோ்வு ஆணையம் அதே ஆண்டு செப்டம்பா் மாதத்தில் நடத்தியது.
அதன் முடிவுகள் 2019 அக்டோபா் மாதம் வெளியிடப்பட்டது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக வேதியியல் பாடத்தை தவிர மற்ற பாட ஆசிரியா்களுக்கு ஏற்கனவே பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வுசெய்யப்பட்ட 313 வேதியியல் முதுநிலை ஆசிரியா்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அவா்களுக்கான நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன், சென்னை மாவட்டத்திலிருந்து தோ்வுபெற்ற ஆசிரியா்களுக்கு கல்வித் துறை வளாகத்தில் பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் அனைத்து ஆசிரியா்களும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.