பரபரப்பான அரசியல் சூழலில் ராமதாஸூடன் அமைச்சர்கள் சந்திப்பு: பாமக இன்று முக்கிய முடிவு

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக அமைச்சர்கள் சனிக்கிழம
பாமக நிறுவனர்  ராமதாஸ்
பாமக நிறுவனர்  ராமதாஸ்


விழுப்புரம்: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக அமைச்சர்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் இந்த தயக்கம் எந்த வகையிலும் நியாயமற்றது.

இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிடில், மிகப்பெரிய போராட்டத்தை நானே தலைமை ஏற்று நடத்துவேன் என ராமதாஸ் சனிக்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அரசியல் முடிவை எடுப்பதற்காக பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் ஜன.31-ஆம் தேதி நடைபெறுமென அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சனிக்கிழமை மாலை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்துக்கு நேரில் வந்து, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர். 

மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த சந்திப்பு, இரவு 8 மணி வரை நீடித்ததாகத் தெரிகிறது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி ஆகியவை தொடர்பாக அமைச்சர்கள் பேசியதாக இரு கட்சி வட்டாரங்களின் தரப்பில் கூறப்படுகிறது.

பாமக இன்று முக்கிய முடிவு: சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பாமக இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு தரும் கட்சிகளுடனே கூட்டணி என அறிவித்து, அதை வலியுறுத்தி தொடர்ந்து பாமக போராட்டம் நடத்தி வருகிறது. 

ஆனால், அதிமுக தரப்பில் இது தொடர்பாக இன்னும் அதன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. 
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் ராமதாஸ் முக்கிய முடிவை அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com