சேலம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் வந்த குழந்தைகளுக்கு ஓமலூர் சுங்கச்சாவடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க விழா சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓமலூர் சுங்க சாவடி அருகே நடைபெற்றது.
சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர் ஆர்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராமன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டி முகாமினை தொடங்கி வைத்தார்.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கார்களில் வருகை தந்த பொதுமக்களின் குழந்தைகளுக்கு சுங்கச்சாவடி அருகே போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.
இதேபோன்று ரயில் நிலையம் பேருந்து நிலையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்புற சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 2,255 மையங்களில் 3 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட உள்ளது. இதில் குறிப்பாக 77 நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் சுகாதார மாவட்டத்தில் 1326 மையங்களிலும் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 929 மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 898 சிறப்பு மையங்கள் 89 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர் ஜே.நிர்மல்சன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.