மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தமிழக அரசு தான் அடித்தளமாக இருந்தது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை, ஒத்தக்கடையில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பங்கேற்று ஆற்றிய உரை, கிராமத்தில் இருக்கின்ற விவசாய தொழிலாளி சிறப்பான முறையில் வாழ வேண்டும் என்பதற்காக பசுமை வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை
என்பதை அறிந்தது. கூடுதலாக நிதி வழங்க ரூ.1804 கோடி நிதி ஒதுக்கிய அரசு. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தமிழக அரசு தான் அடித்தளமாக இருந்தது. அரசு பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 313 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை
செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2000 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்படும் என அறிவித்தது அம்மாவின் அரசு தான். இந்த மின் கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
ஜெயலலிதா, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்கள். தமிழக அரசு, 25,000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.