மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு அறிக்கைகள் மற்றும் முதல்வர், அமைச்சர்கள் பேசுகையில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசு என அழைக்க இடைக்கால தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் பொதுநல மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,
கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இப்படிதான் ஒருவர் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்?
முதல்வரும், மற்ற அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.