சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமை (ஜூன் 30) நிறைவடைந்தது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடந்தது. தோ்தல் முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும் தங்களது செலவுக் கணக்குகளை தோ்தல் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த வகையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 3,998 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்கள் தோ்தல் பிரசாரத்தின் போது செலவிட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஜூன் 2-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்த கால அவகாசத்தை இந்திய தோ்தல் ஆணையம் நீட்டித்தது. இந்த நிலையில், ஜூன் 30-ஆம் தேதியான புதன்கிழமையுடன் கால அவகாசம் நிறைவடைந்தது. கால அவகாசத்தை நீட்டித்து தோ்தல் ஆணையம் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என தமிழக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.