கும்பகோணம்: கும்பகோணம் அருகே செங்கல் சூளை தொழிலாளி வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). செங்கல் சூளை தொழிலாளி. இவரை அப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,
முதல் கட்ட விசாரணையில், ராஜேந்திரன், சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தைத் தனது தாத்தாவிடமிருந்து ஏமாற்றி வாங்கி விட்டதாகக் கூறி பேரனுக்கும், ராஜேந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, ஊர் பஞ்சாயத்து கூடி பிரச்னைக்குரிய இடத்தைப் பிரித்து தர வேண்டும் எனக் கூறினர். இதற்கு ஒப்புக் கொண்டு வந்த ராஜேந்திரன், தன்னைக் குடி போதையில் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டனர் என, நிலத்தை விற்பனை செய்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.