சீர்காழி: நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியதில் கடலில் விழுந்து தத்தளித்த பழையாறு மீனவர்கள் ஐந்து பேரை பத்திரமாக மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர் காரைக்கால் மீனவர்கள்.
சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி பழையார் மீனவர்கள் செல்வராஜ் மகன் மதி (55) , பெரிய மதி மகன் ஹரிஸ் (22) , அய்யா கண்ணு மகன் நகுலன், வேலுநாடார் மகன் முத்தையா (60), வீரப்பன் மகன் ராஜதுரை (45) ஆகிய 5 பேரும் சேதுராஜன் என்பவருக்கு சொந்தமான பெரிய விசை படகில் சனிக்கிழமை காலை 3 மணியளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மூன்றரை கி.மீ கடல் நாட்டி கல் தூரத்திற்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதில் படகில் இருந்த ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அப்போது அந்த வழியாக மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் விசைப்படகில் கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் பத்திரமாக ஏற்றிக் கொண்டு காரைக்கால் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், கடலில் முழுவதுமாக மூழ்கிய படகை கடலூரில் இருந்து வரும் சிறப்புக் குழுவினர் சிலிண்டர் உதவியுடன் கடலில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.