திருத்தணி: திருத்தணியில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல் திருத்தணி பகுதியில் சாலையின் இடது ஓரத்தில் இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது.
திருத்தணியில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல் திருத்தணி பகுதியில் சாலையின் இடது ஓரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரம் ஒன்று இருந்தது.
ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆல மரத்தை வெட்டி அகற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சனிக்கிழமை காலை 6 மணியளவில் திடீரென ஆலமரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. அப்போது எந்த வாகனமும், மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் பணியாளர்களுடன் விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆல மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் ஆலமர முறிந்ததால் மின்கம்பங்கள் இரண்டு உடைந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் விரைந்து சென்று புதிய மின் கம்பங்களை நட்டு மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.