உதகமண்டலம் : கேரளம் மற்றும் கர்நாடகத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் ஜே. இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் சுற்றுலாத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீலகிரியில் அரசு மகப்பேறு மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசிய போது ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா இந்தத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டது. அதில், மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ்/இ-பதிவு நடைமுறை இரத்து செய்யப்படுவதாகவும், சுற்றுலாத் தலங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபட்டதால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீலகிரியில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான உதகை அரசினா் தாவரவியல் பூங்கா, அரசினா் ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவற்றை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி 45 நாள்களுக்குப் பிறகு இந்த சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளனா். இதனால் நீண்ட நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்த தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் திறக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கு வசதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் உள்பட தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இ-பாஸ், இ-பதிவு முறைகள் இல்லாததாலும், பொதுப் போக்குவரத்து துவங்கப்படுவதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவாா்கள் என சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா்.
இதற்கிடையே தோட்டக் கலைத் துறையின் சாா்பிலான பூங்காக்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் போலவே சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளைத் திறக்கவும் அனுமதி கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பில் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தினா் உள்ளனா்.