அவிநாசி: பெருமாநல்லூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, குழந்தை நகர் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் கோபி கண்ணன் (38), பெருமாநல்லூர் காளிபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த வீரமணி மகன் தமிழ்ச்செல்வன் (22). இவர் ஈரோடு தனியார் கல்லூரி மாணவன். அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் மகன் பூமிநாதன் (20), பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி. இவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெருமாநல்லூர் புறவழிச்சாலை கருக்கன்காட்டுப்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த கோபிகண்ணன், தமிழ்ச்செல்வன், பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெருமாநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இவர்களது உடல்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைககு அனுப்பி வைத்தனர். அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.