மானாமதுரை: நிலத்தடி நீராதாரம் உயர சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்ப் பகுதி வைகை ஆற்றில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புவனம், மானாமதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மதகு அணைக்குச் சென்ற இந்த தண்ணீர் அதன்பின் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் வரத்தால் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வைகை ஆற்றுக்குள் செயல்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பிரதானக் குடிநீர் திட்டங்கள் மற்றும் பாசனக் கிணறுகளில் நீராதாரம் உயர்ந்தது.
தற்போது வைகையில் வந்த தண்ணீர் வழிந்தோடிய நிலையில் மானாமதுரை அருகே ஆதனூரில் வைகையாற்றுக்குள் உள்ள தடுப்பணையை கடந்து தண்ணீர் செல்லாதவாறு தடுப்பணையின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் இந்த தடுப்பணையிலிருந்து மானாமதுரை நகர் பகுதியில் காவல் நிலையம் எதிர்புறம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வைகை ஆற்றுக்குள் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.