தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பேராயுதம் தடுப்பூசி என கூறப்படும் நிலையில், சென்னையில் கடந்த 6 நாள்களில் ஒரு நாள் மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்ற மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசியை மத்திய அரசு வழங்காததால் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், இன்றும் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பின்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால நீட்டிப்பு ஏற்படுவதால் ஏதாவது பிரச்னை எழுமோ என்ற அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது.