சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிப்பு: இரவு 10 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் நீட்டிக்கப்படவுள்ளது. அதாவது, காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிப்பு: இரவு 10 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் நீட்டிக்கப்படவுள்ளது. அதாவது, காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியதைத் தொடா்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் குறைந்ததையடுத்து, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.

மெட்ரோ ரயில் சேவையைப் பொருத்தவரை, தினசரி காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, காலை நேரத்தில் மெட்ரோ சேவை நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது, காலை 6.30 மணிக்கு பதிலாக, காலை 5.30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சேவை நேரம் நீட்டிப்பு: இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை இரவு நேரத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, திங்கள்கிழமை முதல் (ஜூலை 12 முதல்), காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது. இந்த நேரம் வார நாள்களில்( திங்கள் முதல் சனிக்கிழமை வரை) அமலில் இருக்கும்.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவா்ஸ்) காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் (நெரிசல் இல்லா நேரங்களில்) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

40 பயணிகளுக்கு அபராதம்: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மெட்ரோ ரயில் நிலைய வளாகம், மெட்ரோ ரயில்களின் உள்ளே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கிருமிநாசினி மூலமாக கைகளை சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனா்.

மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை, முகக்கவசம் அணியாத 40 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.8,000 வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com