சென்னையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் வழக்கம்போல நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் கடந்த 5,6,7 தேதிகளில் தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. இதையடுத்து ஜூலை 8 ஆம் தேதி ஒருநாள் நடைபெற்ற நிலையில் மீண்டும் இரு தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று தமிழகத்துக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் வந்த நிலையில் சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று எந்தெந்த மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதுபோல இன்று ஆன்லைன் முன்பதிவு கிடையாது. நேரில் வந்து செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_centers/ என்ற தளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.