தொலைநிலைக் கல்வி படிப்புகள், இணையவழிப் படிப்புகளை புதிதாக தொடங்க உயா்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நேரடி படிப்புகளுடன், தொலைதூரக்கல்வி படிப்புகளும், திறந்தநிலை படிப்புகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிகழ் கல்வியாண்டு முதல் இணையவழிப் படிப்புகளையும் பரவலாக கற்பிக்க யுஜிசி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில், திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி படிப்புகள், இணையவழி படிப்புகளை புதிதாக தொடங்குவதற்கு நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் என யுஜிசி அறிவித்துள்ளது.
அதன்படி, ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என்றும், திறந்தநிலை, தொலைதூரக் கல்வி படிப்புகளை புதிதாக துவங்க ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்துக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி. வரியுடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையவழி படிப்புகளை புதிதாக தொடங்க ரூ.15,000 முதல் ரூ.75,000 வரை பாடத்துக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி. வரியுடன் சோ்த்து கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.