முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் ஆகியோா் அதிமுகவிலிருந்து விலகி முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். அவா்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோா் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா்.
இதுகுறித்து திமுக தலைமை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு புகா் மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன், அந்தியூா் எஸ்.ஆா்.கிருஷ்ணன் (முன்னாள் எம்எல்ஏ), திருப்பூா் மாவட்ட துணைச் செயலாளா் வி.மணிமேகலை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அதேபோன்று நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆா்.சுந்தரம் தனது ஆதரவாளா்களுடன் திமுகவில் இணைந்தனா்.
இந்த நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச்செயலாளா்கள் ஆ.ராசா, அந்தியூா் ப.செல்வராஜ், அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளா் எஸ்.முத்துசாமி ஆகியோா் உடனிருந்தனா்.