நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
நீட் தோ்வு பாதிப்புகளைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பாஜக பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பல்வேறு தரப்பினர்களிடையே விசாரணை நடத்தி வந்த நிலையில், நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது செல்லும் எனக் கூறி கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கூறியதாவது,
“நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் குழு இல்லை.
மக்கள் கருத்துக் கேட்பு தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கை நடைமுறையை தடுக்கும் வகையில் மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை. குழுவின் மூலம் ஆதாரம் கிடைத்தால், அதன்மூலம் மாணவர் சேர்க்கையை மாற்றி அமைக்க கோரலாம்.
மேலும், நீட் தாக்கம் குறித்து ஆராய அமைத்த குழுவின் நியமனம் வீண் செலவு எனக் கூறமுடியாது.”