கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியில் குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவிகள் 2 பெண்கள் என 5பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் சீதாம்பாள் தெருவை சேர்ந்த சிலர் அங்குள்ள அங்காளம்மன் கோவில் குளத்தில் துணி துவைக்க சென்றனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் நர்மதா(12) குளத்தில் ஆழத்தில் சிக்கிய நிலையில் அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற ராஜ் மனைவி சுமதி(35), அவரது மகள் அஸ்விதா(14), முனுசாமி மனைவி ஜோதி(38), தேவேந்திரன் மகள் ஜுவிதா(14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக குளத்தின் உள்ளே மூழ்கி ஆழத்தில் சிக்கி இறந்தனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளத்தில் துணி துவைத்தவர்கள் அங்கு இல்லாத நிலையில் குளக்கரையில் துணிகள் சிதறி கிடந்ததைக் கண்டு அதிர்ந்து குளத்தில் தேடிய போது 5பேரின் உடல் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தவர்கள் இது குறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து இறந்த 5பேரின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரித்து, வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாறன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர்.
ஒரே பகுதி ஒரே தெருவைச் சேர்ந்த 5பேர் குளத்தில் இறந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது