சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 27.44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த நிலையில், சுகாதாரத் துறையினர் ஆங்காங்கே முகாம்களை அமைத்து, மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வந்தனர்.
தற்போது, கரோனா தடுப்பூசி மீதான எண்ணம் மக்களிடையே மாறியதால், பல இடங்களில் அதிகாலை முதலே வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், எதிர்மறையாக, எங்குமே தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
போதிய தடுப்பூசி இருப்பு இல்லாததால் பல இடங்களில் முகாம்கள் ரத்து செய்யப்படுவது கடந்த சில நாள்களாகவே நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 13ஆம் தேதி வரை சென்னையில் 27,44,261 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், ஜூலை 13ஆம் தேதி மட்டும் 20,632 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.