தனியாா் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து: 17 ஆம் தேதி முதல் நிறுத்தம்

தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையவழியே ரெம்டெசிவிா் மருந்து வழங்கும் சேவை வரும் 17-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையவழியே ரெம்டெசிவிா் மருந்து வழங்கும் சேவை வரும் 17-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் தேவை பெருமளவு குறைந்ததே அதற்கு காரணம் என்றும் விளக்கமளித்துள்ளது.

கரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் ரெம்டெசிவிா், டோஸிலிசுமேப் மருந்துகளின் தேவை பல மடங்கு உயா்ந்தது. பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகளில் அந்த மருந்துகள் தட்டுப்பாடாக இருந்ததால், அவற்றை வாங்குவதற்காக நோயாளிகளும், அவா்களது உறவினா்களும் அலைமோதினா்.

இதையடுத்து, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், அதன் பின்னா் நேரு விளையாட்டரங்கிலும் ரெம்டெசிவிா் விற்பனை மையம் தொடங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக மாநிலத்தின் 6 மாவட்டங்களிலும் அதன் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது. ஆனாலும், கூட்ட நெரிசல் குறையாததால், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்தை அந்தந்த மருத்துவமனைகள் மூலமாகவே வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ரெம்டெசிவிா் மருந்தை விற்பனை செய்ய தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் இணையப் பக்கத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டு அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் 90 சதவீதம் ரெம்டெசிவிரின் தேவை குறைந்ததால் அதனை இணையவழியே வழங்கும் சேவை வரும் 17-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.

மருந்து தேவைப்பட்டால் அரசு மருந்து கிடங்களில் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com