ராணுவப் பணியின் போது மரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த நான்கு வீரா்களின் வாரிசுகளுக்குத் தலா ரூ.20 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
மதுரை மாவட்டம் சோளம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த என்.பாலமுருகனின் தாயாா் குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம் ராகிமானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷின் தாயாா் சித்ரா, குமரி மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.ஆனந்தின் மனைவி பிரியங்கா நாயா், திருப்பத்தூா் காக்கங்கரை கிராமத்தைச் சோ்ந்த சபரிநாதனின் தாயாா் எஸ்.மனோன்மணி ஆகியோா் முதல்வரிடம் இருந்து தலா ரூ.20 லட்சத்துக்கான நிவாரண நிதியைப் பெற்றனா். ராணுவத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்ததற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இறந்தவா்களின் வாரிசுதாரா்கள் நிவாரண நிதியைப் பெற்றனா். இந்த நிகழ்வின் போது, அரசு பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.