வாழப்பாடி: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து இரு கட்சித் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியாபட்டிணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.பி.மணி மனைவி பார்வதியும், துணைத்தலைவராக, ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமாரின் சகோதரர் செந்தில்குமார் மனைவி புவனேஸ்வரியும் உள்ளனர்.
ஏற்கனவே அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஒதுக்கப்படுகின்ற நிதியை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு கூடுதலாகவும், தி.மு.க., உள்ளிட்ட கட்சியை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு குறைவாகவும் ஒதுக்கி, பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க., ஒன்றியக்குழு உறுப்பினர்களிடையே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமைழமை காலை அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் பார்வதி மணி தலைமையில் கூடியது.
இக்கூட்டத்தில், திட்டக் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் கரோனா நிவாரண நிதி வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக, திமுக-அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் வெளியானதால் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இல்லாமல், அதிமுக ஒன்றிய குழு தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 10 பேர் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இரு கட்சி தொண்டர்களும் களைந்து சென்றதால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.