விருதுநகர்: விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னதாக விருதுநகர் மதுரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கே.கே .எஸ் .எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் தனியார் பள்ளியில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் எம்பி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காமராஜர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஜே. மேகநாதரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.