சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம்:ஞாயிறு, பொது விடுமுறை நாள்களில் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம்:ஞாயிறு, பொது விடுமுறை நாள்களில் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியதைத் தொடா்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. நோய்த் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.

மெட்ரோ ரயில் சேவையை பொருத்தவரை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறை நாள்களில்

நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த புதிய நடைமுறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முதல் அமலுக்கு வருகிறது.

சேவை நேரம் நீட்டிப்பு : இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

மெட்ரோ ரயில் சேவைகள் வாரநாள்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவா்ஸ்) காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் (நெரிசல் இல்லா நேரங்களில்) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

46 பயணிகளுக்கு அபராதம்: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மெட்ரோ ரயில் நிலைய வளாகம், மெட்ரோ ரயில்களின் உள்ளே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கிருமிநாசினி மூலமாக கைகளை சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனா்.

மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை, முகக்கவசம் அணியாத 46 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.9,200 வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com