நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது மானாமதுரை?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம்
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நகரில் வார்டுகளின் எண்ணிக்கையும் 25 அல்லது 28 ஆக அதிகரிக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி அதிக வருமானம் உள்ள பேரூராட்சியாக உள்ளது.

மானாமதுரை பேரூராட்சி எல்கை என்பது நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. மக்கள்தொகை எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து தற்போது 40 ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தகுதியுள்ள தேர்வுநிலை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரை பேரூராட்சி நிர்வாகத்திடம் அரசிடமிருந்து கருத்துரு கேட்கப்பட்டது.

இதையடுத்து இப்பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான தகுதிகள் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பட்டது. தற்போது 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 32,000 மக்கள் தொகை கொண்ட பல மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக  தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என நம்பப்படுகிறது. 

சமீபத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் அனைத்து தகுதியும் உள்ள மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது அதன் வார்டுகள் 25 லிருந்து 28 ஆக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி மானாமதுரை நகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டால்  வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கை 25 லிருந்து 28 ஆக அதிகரிக்கும்.

இதற்காக மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த கல்குறிச்சி, கீழமேல்குடி, கீழப்பசலை, ராஜகம்பீரம், மாங்குளம் ஆகிய ஊராட்சிகளில் மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள் மானாமதுரை நகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.

வார்டுகளை கூடுதல் செய்வதற்காக மேற்கண்ட ஊராட்சிகளில் இருந்து மானாமதுரை பேரூராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகளும் ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என மானாமதுரை பேரூராட்சி துறையினர் தெரிவித்தனர். 

வரும் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது மானாமதுரைக்கும்  நகராட்சி தகுதியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com