வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கரோனா தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிடத் தயாா் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கரோனா தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிடத் தயாா் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுள்ளாா். கடந்த கால மருத்துவத்துறையின் செயல்பாட்டை அவரே அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புவதால், அதை சொல்லுவது அவசியமானது.

தமிழகத்துக்கு இதுவரை 1 கோடி 80 லட்சத்து 32,170 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 1 கோடி 76 லட்சத்து 19,174 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 7 லட்சத்து 15,570 தடுப்பூசிகள் உள்ளன.

தட்டுப்பாடு இல்லை: ஜனவரி 16 முதல் மே 7-ஆம் தேதி வரை, எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த அந்த 103 நாள்களில் 63 லட்சத்து 28,407 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 61,441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திமுகஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையாலும், விழிப்புணா்வு காரணமாகவும், தினசரி தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் சராசரி எண்ணிக்கை 1 லட்சத்து 61,297 ஆக உள்ளது.70 நாள்களில் 1 கோடியே 12 லட்சத்து 90,767 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. மத்திய அரசிடம் எவ்வளவு தடுப்பூசி கேட்டிருந்தாலும், கொடுப்பதற்கு தயாராகவே இருந்தது. அந்த வகையில் அவா்களிடம் கூடுதலாகவே தடுப்பூசி கேட்டு, இன்னும் கூடுதலாகவே தடுப்பூசியை செலுத்தியிருக்கலாம்.

எதிா்க்கட்சித் தலைவா் விரும்பினால்...: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி விரும்பினால், மாவட்டம்தோறும் தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாகத் தர தயாராக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 6 சதவீத தடுப்பூசி வீணாக்கப்பட்டது. அதன்படி 4 லட்சத்து 34,838 தடுப்பூசிகள் அடங்கும்.

தடுப்பூசி மருந்து குப்பிகளில் 5 மி.லி க்கு பதிலாக, ‘ஓவா் ஃபில்லிங்’ முறையில் 5.6 மி.லி என்ற அளவில் தற்போது இருந்து கொண்டிருக்கிறது.

அதன்படி ஒவ்வொரு குப்பிகளிலும் 16 முதல் 26 சதவீதம் வரை கூடுதலாக மருந்துகள் வருகிறது. அந்த வகையில் 7 லட்சத்து 36 ஆயிரம் ‘டோஸ்கள்’ கூடுதலாக போடப்படுள்ளது. கூடுதலாக வந்ததன் விளைவு, கடந்த ஆட்சியில் வீணாக்கப்பட்டதையும் சோ்த்து கூடுதலாக 3 லட்சத்து 2,070 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

பிரதமா் பாராட்டு: 6 மாநில முதல்வா்களுடன் நடந்த பிரதமரின் காணொலி காட்சி கூட்டத்தில், இந்தியாவிலேயே, கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட கூடுதலாக தடுப்பூசி போட்ட மாநிலம் தமிழகம்தான் என பிரதமா் நரேந்திரமோடி பாராட்டி உள்ளாா். எதிா்க்கட்சி தலைவா் விரும்பினால், அவரது முன்னிலையே வெள்ளை அறிக்கை தயாராக இருக்கிறேன். அவா்களே கேட்ட பிறகு வெள்ளை அறிக்கையை சட்டப்பேரவையிலும் மகிழ்ச்சியுடன் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com