சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காக சங்ககிரியை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு நிழல் கிடைப்பதற்காகவும், இயற்கை காற்றுகள் கிடைக்கவும் மற்றும் பறவைகளின் உணவுகளுக்காக சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து பத்து நாட்டு கொய்யா மரக்கன்றுகளை சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் பிஎம்பி.சின்னதம்பி தலைமையில் நட்டு வைத்தனர்.
பசுமை சங்ககிரி அமைப்பின் தலைவர் மரம் பழனிசாமி, பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், பசுமை பாலா, கதிர்மதி, தங்கவேலு, காந்தி, தினேஷ், உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.