4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 19) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 19) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வடக்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 19) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி ஆகிய 2 மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரியில் தலா 100 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தலா 90 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 80 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 70 மி.மீ., திருப்பத்தூா், நாகப்பட்டினத்தில் தலா 60 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவண்ணாமலை மாவட்டம் போளூா், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவள்ளூா் மாவட்டம் புழலில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 22-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 22-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com