7 பேர் விடுதலை, நீட் குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசாதது ஏன்? ஸ்டாலின் பதில்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை மற்றும் நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசாதது ஏன்? என்பதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
7 பேர் விடுதலை, நீட் குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசாதது ஏன்? ஸ்டாலின் பதில்
7 பேர் விடுதலை, நீட் குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசாதது ஏன்? ஸ்டாலின் பதில்

புது தில்லி: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை மற்றும் நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசாதது ஏன்? என்பதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புது தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு குடியரசுத் தலைவரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக வந்தேன். அவரைச் சந்தித்த நேரத்தில், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு எனக்கு அவர் வாழ்த்துகளைச் சொன்னார்கள்.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த விழாவிற்குத் தலைமை தாங்கி விழாவினை நடத்திட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அந்த விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்தைச் சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்கவேண்டும் என்ற அந்தச் செய்தியையும் சொல்லி இருக்கிறோம். 

அதையொட்டி மதுரையில் கருணாநிதி பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமையவிருக்கக்கூடிய அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும், அதேபோல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமையவிருக்கக்கூடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும், நடத்தி வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.
தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.

கேள்வி – வேறு ஏதாவது கோரிக்கைகள் வைக்கப்பட்டதா? 7 பேர் விடுதலை, நீட் தேர்வு குறித்து... 

முதல்வர் பதில் - இல்லை அதைப்பற்றி பேசவில்லை. 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை, நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும். சட்டப்படி அதை நீதிமன்றத்தின் மூலமாகத்தான் நாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும். 

கேள்வி – மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பிரதமரைச் சந்தித்து இருக்கிறார். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். நீங்களும் பிரதமரைச் சந்தித்து இருக்கிறீர்கள், அடுத்தது குடியரசுத் தலைவர் அவர்களை இது தொடர்பாகச் சந்திக்கலாம் என்ற நிலையில்....

முதல்வர் பதில் – ஏற்கனவே மேக்கேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக பிரதரை சந்தித்தபோது அந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்துக் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து, எங்களுடைய நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு தில்லிக்கு வந்து  மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து அப்பிரச்னை குறித்து விவாதித்திருக்கிறார்கள். நீர்வளத் துறை அமைச்சரும் நிச்சயமாக அதற்கு நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள். எனவே அது அந்த நிலையில் இருக்கிறது. 

கேள்வி – கரோனா மூன்றாவது அலை குறித்தும், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும்...

முதல்வரின் பதில் – மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு முனைப்போடு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனவே அது குறித்து நிச்சயமாக விவாதித்து, பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துபேசி, அதற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.

கேள்வி – கர்நாடக முதலமைச்சர் பிரதமர் மோடியை இரண்டு நாள்களுக்கு முன்பு சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் கண்டிப்பாகத் தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணை கட்டியே தீருவோம் என்று கூறியிருப்பது குறித்து.

ஸ்டாலின் பதில் – எங்களுக்கு பிரதமர் நம்பிக்கையோடு உறுதி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் உறுதி கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இது இருக்கிறது. எனவே நாங்கள் அதைச் சட்டப்படி சந்திப்போம்.

கேள்வி – ஒருவேளை கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை தொடர்பாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வீர்களா?
முதல்வரின் பதில் – பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று எங்களுடைய அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதுதான் செய்தி.

கேள்வி – கர்நாடகம் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களும் கலந்து ஆலோசிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?

முதல்வரின் பதில் – அதற்கு இப்போது அவசியம் இல்லை.
கேள்வி – நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன மாதிரி நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு...

முதல்வரின் பதில் – ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி என்னென்ன விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று விவாதித்து இருக்கிறோம். அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவரும் மாநிலங்களவைக்குழுத் தலைவரும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் சொல்லி அந்த அடிப்படையில் பேச இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com