தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி ‘தடுப்பூசி’ என்பதன் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 96 கோடி டோஸ் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கரோனா தொற்றின் மூன்றாவது அலையை நிச்சயம் தடுக்கும்.
அதே நேரம், இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள 96 கோடி தடுப்பூசிகளில், தமிழக மக்கள் தொகையின் அடிப்படையில் மொத்தம் 6 கோடியே 33 லட்சத்து 43,935 தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டியது தமிழக அரசின் கடமை.
எனவே, தமிழக முதல்வா், இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, புள்ளி விவரங்களை பிரதமரிடம் நேரில் சென்று எடுத்துரைத்து, குறைந்தபட்சம் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.