எனது சுட்டுரை ஹேக் செய்யப்பட்டுள்ளதால், அதில் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் என்னுடைய பதிவுகள் அல்ல என்று நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்புவின் சுட்டுரைப் பக்கம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடிகை குஷ்பு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
எனது சுட்டுரைப் பக்கம் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளதால், அது குறித்து டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்தேன்.
எனது சுட்டுரை கணக்கை யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன்.
எனது சுட்டுரையில் உள்ள பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. சுட்டுரையின் கடவுச்சொல் மாற்றப்பட்டுள்ளதாக எனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது என்று கூறினார்.
மேலும் பெகாஸஸ் உளவு மென்பொருள் குறித்தும், ராகுல் காந்தி செல்லிடப்பேசியை ஒட்டுக்கேட்டது தொடர்பான புகார் குறித்து பேசிய அவர், ராகுல்காந்தி செல்லிடப்பேசியை உளவு பார்ப்பதன் மூலம் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை என்று கூறினார்.