கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் வாவேர்பள்ளி, மஸ்ஜிதே இலாஹி, மைதீன் ஆண்டவர் பள்ளி, அஸிசி பள்ளி, டவுன் பள்ளி, ஹெளதியா ஆகிய பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பொதுமக்கள் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று பரவல் என்பதால் ஈத்கா மைதானத்தில் கூட்டுத்தொழுகை நடத்த அனுமதியில்லாதலால், சமூக இடைவெளியை கடைபிடித்தும், சானிடைசர் பயன்படுத்தியும் தனித்தனி குழுக்களாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர், தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
கூடலூரில் உள்ள மைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜமாத் கமிட்டியினர் தனித்தனியாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.