திருத்தணி: தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் குருவணக்கம் கூட்டம் இன்று திருத்தணியில் நடைபெற்றது.
திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளியில், தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் குரு வணக்கம் கூட்டம் திருத்தணி கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் எஸ்.வெங்கடேசுலு தலைமையில் இன்று நடைபெற்றது.
தேசிய ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் கதிரொளி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் நீலமேகன் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதில், சிறப்பு விருந்தினராக அம்மையார் குப்பம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் எம்.என். சொக்கலிங்கம் கலந்துகொண்டு, பழங்காலத்தில் குருவின் அறிவுரைப்படி ஓழுக்கமான வாழ்க்கையை சிஷ்யர்கள் மேற்கொண்டனர், குருவின் வாக்கை வேதமாகப் பின்பற்றியதாகப் பேசினார்.
மேலும், நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ம.கோ.திரிலோகசந்திரன் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக குருவராஜபேட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஜகந்நாதன் சரஸ்வதி துதி பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில், தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் மே.சு.பார்த்தீபன் நன்றி கூறினார்.