மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

பலத்த மழை: ஜூலை 23, 24, 25 ஆகிய மூன்று நாள் நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...:

சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 50 மி.மீ., பந்தலூரில் 40 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 30 மி.மீ., சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூா், திருவள்ளூா் மாவட்டம் மாதவரம், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை : தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். இதுதவிர, கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கும் மீனவா்கள் ஜூலை 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com