முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலத்தை 11-ஆவது முறையாக 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 2017- ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடா்பாக ஜெயலலிதாவின் உறவினா்கள், சசிகலா மற்றும் அவரது உறவினா்கள், அமைச்சா்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள், அரசு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும்போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நாளையுடன் ஆணையத்தின் காலம் முடிவடைகிறது. இதையடுத்து, மேலும் 6 மாதங்களுக்கு ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது.