கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.25 அடி உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி அணை மற்றும் வனப்பகுதி ஓடைகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. பெரியாறு அணைப்பகுதியில் 85.80 மி. மீ, தேக்கடி ஏரியில் 47.0 மி.மீ மழை பெய்தது. இதனால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 5,048 கன அடியாக வந்தது. இதன் எதிரொலியாக வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 130.25 அடியாக இருந்தது.
ஒரே நாளில் 1.25 அடி உயர்வு: வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130.25 அடியாகவும், (மொத்த உயரம் 142), நீர் இருப்பு 4,756 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் வினாடிக்கு 1,325 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.50 அடியாகவும், நீர் இருப்பு 5,048 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 4,294 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாகவும் இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்தது.
மின் உற்பத்தி குறைவு: அதே நேரத்தில் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், கடந்த ஜூலை 10 முதல், அணையிலிருந்து, வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் மூலம் மூன்று மின்னாக்கிகளில் தலா, 36 மெகாவாட் என, 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இதில் வியாழக்கிழமை முதல் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகளில் மட்டும் 41, 40 என மொத்தம், 81 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, இதன் மூலம் தண்ணீர் வரத்து அதிகமாக வந்தும், மின்சார உற்பத்தி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.