கூத்தாநல்லூர்: வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கலிட்டு படையல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு, படையல் செலுத்தினர்.
கூத்தாநல்லூர்: வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கலிட்டு படையல்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு, படையல் செலுத்தினர். 

சிவபெருமானின் மாமனாரும், பார்வதி தேவியின் தந்தையுமான தச்சன் தன் வேள்வியை தகர்த்ததாலும், கோடி முனிவர்கள் மகா யாகம் செய்த நகர் ஆனதாலும் வேள்வி நகர் என்றும், தற்போது வேளுக்குடி எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வூரில் அன்னை ஸ்ரீ அங்காளப் பரமேஸ்வரி அம்பாள் எழுந்திருளிய ஆலயம் அமைந்துள்ளது. திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பழமையான கோயிலாகும்.

தச்சன் வேள்வி செய்த போது, தன் கணவர் ஈசனை அழைக்காததால் கோபம் அடைந்த பார்வதி தேவி, விஸ்வரூபத்துடன் பெரியாச்சியாக, வேளுக்குடி வந்து அமர்ந்தாள். இறைவனான சிவபெருமான் அகோர வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்தார்.

மேலும், தச்சன் மற்றும் அவரது மகன்கள் எச்சன் முதலியோரை யாகம் செய்வித்த, யக்ஷிப் பிரஜாபதி உள்ளிட்டோரின் தலைகளை அறுத்துக் கொண்டு வந்து அம்மனின் காலடியில் சேர்ப்பித்தார். இதனால் பார்வதி, ஸ்ரீ அங்காள அம்மனாக இங்கு காட்சி தருகிறார் என்பது வரலாறு. இக்கோயிலின் அங்காளப் பரமேஸ்வரியை, குலதெய்வமாகக் கொண்டுள்ளவர்கள் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை , மயிலாடுதுறை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க உள்ளார்கள்.

ஆண்டுதோறும், இக்கோயிலில், கொடி வேற்றத்துடன் மகா சிவராத்திரி பூசை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.மேலும், ஆடி மாதம், தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஊரணிப் பொங்கல் என அழைக்கக் கூடிய, ஊர் மக்கள் ஒன்று கூடி, 108 க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் பொங்கல் வைப்பார்கள். தற்போது, உலகத்தையே ஆட்டிப்படைக் கொண்டிருக்கும் கரோனா தொற்றாலும், ஊரடங்கா லும் கோயில்கள், பள்ளி வாயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், சில விதிமுறைகளுடன் வழிபாடு நடத்த கோயில்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. ேவளுக்குடி ஸ்ரீலஸ்ரீ சடையப்ப பூஜாரியார்கள் வி.எஸ். இரமேஷ்குமார், வி.எஸ்.ராஜீ மற்றும் கோயில் நிர்வாகிகளின் ஏற்பாட்டின் படி, ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, கோயிலின் முன்பு, 25 க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள், முகக்க வசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் பொங்கலிட்டனர். நீண்ட மாதங்கங்களுக்குப் பிறகு, கோயில் திறக்கப்பட்டு, பொங்கலிடப்பட்டதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டனர். தொடர்ந்து, அங்காளம்மனுக்கு அனைத்து திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொங்கல் படையலிட்டு, மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. அங்காளப் பரமேஸ்வரியை, பயபக்தியுடன் பக்தர்கள் வணங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com