சென்னையில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 600 சாலை புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் பேருந்து சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் உள்ள 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒப்பந்தம் அளிக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்விட்டு விவரங்களை அளிக்க மண்டல துணை ஆணையா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு ஆணையா் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டதுடன், நேரடியாக ஆய்வும் மேற்கொண்டாா்.
2 வாரங்கள் நடைபெற்ற ஆய்வில் புனரமைப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட சாலைகளில் 660 சாலைகள் தரமாக இருப்பதும் புனரமைப்பு தேவைப்படாதவை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பு தேவைப்படாத சாலைப் பணி ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான சாலைகள் பேருந்துகள் செல்லாத பகுதிகளின் உட்புறச் சாலைகள் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 660 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட இருந்த ரூ.43 கோடி இழப்பு தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.