பாகுபாடு இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அடிப்படை வசதிகள்: அமைச்சர் கே.என்.நேரு 

பாகுபாடு இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 
திருச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி: முன்னேறிய மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

திருச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல்  துறை  அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா மற்றும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: திருச்சி உள்பட 8 மாவட்டங்களில் இருந்து சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி அதிகாரிகள்,குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதிக்கு தேவையானதை கோரிக்கையாக வைத்துள்ளார்கள். அனைத்து கோரிக்கைகளிலும் உள்ள சிரமங்களை துறையின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பணிகளை விரைந்து முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி, பாதுகாப்பட்ட குடிநீர் வசதி, ஏற்கனவே கட்டப்பட்டு பழுதடைந்துள்ள கட்டடங்களை சரி செய்ய வேண்டும், பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி,பாதாள சாக்கடை வசதி போன்றவை தான் பெரும்பாலனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அதை சரியாக பராமரிக்காத காரணத்தால் குடிநீரோடு கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையெல்லாம் கண்டறிந்து விரைவாக சரி செய்யும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக சரி செய்யப்பட்டு அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் உள்ள காவேரி ஆற்றின் மீது 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை கடந்த ஆட்சியில் அதிகம் சேதப்படுத்தி விட்டார்கள். அந்த பாலத்தின் பலம் குன்றி விட்டது. எனவே காவேரியின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட திட்டம் உள்ளது.

திருச்சியில் சுற்று சாலை பணிகள் விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னேறிய மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற பகுதிகளுக்கு நகர்புறங்களில் உள்ள வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் சாலைகள் அமைக்க விடுப்பட்ட டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அது எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பதை பார்த்துவிட்டு மற்ற மாநகராட்சிகளில் டெண்டர் விடப்பட்டதிலும் சாலைகள் அமைப்பதிலும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஆட்சியிலேயே 80 சதவிகிதம் செலவு செய்து விட்டார்கள். மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் நிறைவடையாமல் உள்ள அரிஸ்டோ பகுதியில் உள்ள பாலப்பணிகளை நிறைவு செய்ய ராணுவ நிலத்தை கேட்டோம் அவர்கள் ராணுவ நிலத்திற்கு சமமான மதிப்புள்ள வேறு இடத்தை கேட்டார்கள் அதையும் கொடுத்து விட்டோம். விரைவில் அந்த பாலத்தை மாநகராட்சி சார்பில் கட்டிமுடிப்போம்.

திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஆசை உள்ளது. அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். சில ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விருப்பம் இல்லை என சிலர் கூறுகிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்தமாட்டோம். விருப்பப்பட்டால் மட்டுமே ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைப்போம்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தவறு செய்திருப்பதாக தெரிந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டது. தவறு செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com