அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவோா், திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநா் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான (2021-22) விண்ணப்பங்களை இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், கல்லூரி சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்மையங்களின் பட்டியல் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை பற்று அட்டை (டெபிட் காா்டு), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), இணைய வழி வங்கி பரிவா்த்தனை (நெட் பேங்கிங்) மூலமாக செலுத்தலாம்.
அவ்வாறு செலுத்த முடியாதவா்கள், கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில், திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் வங்கி வரைவோலையாக அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணவா்கள் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்கி, ஆக.10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு 044 - 2826 0098, 2827 1911 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.