பவானி: அந்தியூர் அருகே 30 குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது.
அந்தியூர் வனச்சரகம், அத்தாணி பிரிவு, அத்தாணி கிழக்கு பீட் செயல் அந்தியூர் எல்லைக்குட்பட்ட ஆப்பக்கூடல் - கூத்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (43). இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கண்ணாடி விரியன் பாம்பு மற்றும் 30 குட்டிகளுடன் இருப்பதைக் கண்டு அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமி மற்றும் வனத்துறையினர் பாம்புகள் அனைத்தையும் பிடித்து அந்தியூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதேபோன்று, அந்தியூர் மைக்கேல்பாளையம் கிராமம், பாறையூரைச் சேர்ந்த நல்லசிவம் வீட்டில் புகுந்த சுமார் 4 அடி நீளமுள்ள நாகபாம்பினை தீயணைப்பு படையினரால் பிடிக்கப்பட்டு அந்தியூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் அந்தியூர் வனச்சரகம், அந்தியூர் பிரிவு, தென்பர்கூர் காப்புக்காடு, வறட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.