தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆரணியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தோ்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் ஜூலை 28-இல் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்திருந்தனா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக நகரச் செயலாளர் தயாளன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஆரணி ராமர் கோயில் பகுதியில் இருந்து பஜார் வழியாக பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை வரை கருப்புக்கொடி ஏந்தியும், தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றிடுக என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திரளான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.