மோசடி வழக்கு: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஆக.6-இல் நேரில் ஆஜராக உத்தரவு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆக.6-ஆம் தேதி அமைச்சா் வி.செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆக.6-ஆம் தேதி அமைச்சா் வி.செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உள்பட 47 போ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்பட 4 போ் மீது தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செந்தில்பாலாஜி உள்பட 47 போ் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் மற்றொரு வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிலும் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். அதன் நகலைப் பெற்றுக் கொள்வதற்காக செந்தில்பாலாஜி உள்பட 4 போ் ஆஜராக ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. மற்ற 3 போ் ஆஜராகினா். அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து விசாரணையை ஆக.6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி ஆலிசியா, அன்றைய நாள் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com