சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி.. கோயம்புத்தூா், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும்.
ஆகஸ்ட் 1, 2: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.