தூத்துக்குடியில் பிரையன் நகரில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் வீட்டின் முன்புற கதவை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி பிரையன் நகரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் சுங்கத் துறையில் கண்காணிப்பாளர் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சென்னையில் பல் மருத்துவம் படித்து வருகிறார். அவருடன் அவர் மனைவி இருப்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்யாணசுந்தரம் சென்னை புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து திரும்பிய அவர் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் காணவில்லை. உடனடியாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் கைரேகை பிரிவு காவலர்கள் வீட்டை சோதனை செய்தனர். அதில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் வயர்கள் வெட்டப்பட்டு மென் பொருளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 70 முதல் 80 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தெரியவந்தாக கூறப்படுகிறது. காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.