இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நலனிற்காக 3 கார்கள், 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டார இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி. துளசி நாராயணன் தலைமை தாங்கினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் பா. லோகநாதன், பகுதி தலைவர் கே.முனிரத்தினம், ஏடூர் நரேஷ், ஷேர் அறக்கட்டளை தலைவர் மேரீ ஆக்சீலியா முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மூன்று கார்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்களை கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அனிதா சுந்தரி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த மூன்று கார்கள் 2 ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஓட்டுனர்களை நியமித்து அதோடு அந்த வாகனங்களுக்கு எரிபொருளையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏற்க உள்ளனர்.
இந்த வாகனங்கள் முற்றிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லவும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த சேவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாலிபர் சங்கத்தினரின் இந்த செயல்பாட்டினை வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் வெகுவாக பாராட்டினார்.