எடப்பாடி: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எடப்பாடி நகராட்சியின் வருவாய் ஆய்வாளர், புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எடப்பாடியை அடுத்த வெள்ள நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டுவேல் (47), இவர் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செங்கோட்டுவேல், கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் செங்கோட்டுவேல் எடப்பாடி அருகே உள்ள சின்ன நாச்சியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நோயின் தீவிரம் அதிகமானதால் புதன்கிழமை காலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கோட்டுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் உயிரிழந்த வருவாய் ஆய்வாளர் செங்கோட்டுவேலுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
வருவாய் ஆய்வாளர் செங்குட்டுவேலுவின் குடும்பத்திற்கு, எடப்பாடி நகராட்சி ஆணையாளர் பழனியப்பன், பொறியாளர் முருகன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் உயிரிழந்த நிகழ்வு, அவருடன் பணியாற்றிய முன்கள பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.