நாட்டில் தொடா்ந்து 5-வது நாளாக குறைந்து வரும் தொற்று பாதிப்பு

நாட்டில் தொடா்ந்து 5 -ஆவது நாளாக, 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
கரோனா தொற்று
கரோனா தொற்று


நாட்டில் தொடா்ந்து 5 -ஆவது நாளாக, 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 45 நாள்களுக்குப் பின்னா் 20 லட்சத்துக்கு கீழ் உள்ளது. அதன்படி, 17,93,645 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் தொடா்ந்து 5 நாளாக கரோனா தொற்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஒரே நாளில் 3,207 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,35,102-ஆக அதிகரித்துள்ளது.

20-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,31,456 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 

நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,61,79,085 -ஆக இன்று பதிவாகியுள்ளது. 

புதன்கிழமை காலை அளவிலான 24 மணி நேரத்தில் 20,19,773 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 35,00,57,330 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 21,85,46,667 பேருக்கு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com